சட்டசபைக்கு செல்வது நமது லட்சியம் கிடையாது-சீமான்
கும்பகோணம்:கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று ராயா ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் சீமான் பேசியதாவது:-
கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகமாக உயர்த்தியுள்ளோம். இக்கட்சியில் பொறுப்புகளில் உள்ளவர்கள் பதவிக்காக அல்லாமல் மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வையும், உதவிகளையும் செய்பவர்களாக இருக்க வேண்டும். மக்கள் சேவையில் தன்னலமற்ற அர்ப்பணிப்பு தான் உங்களை உயர்ந்த பதவிக்கு கொண்டு வரும்.
என்னோடு இருப்பவர்கள் இரண்டு வகையானவர்கள். ஒன்று தளபதிகள், அடுத்து தம்பிகள். தளபதிகள் இன விடுதலைக்காக முன்னின்று போராடுபவர்கள். தம்பிகள் என்னோடு உள்ளவர்கள். இனத்துக்காகவும், மொழிக்காகவும் எதிர் பார்ப்புகள் இன்றி உயிர் நீத்தவர்கள் தான் மாவீரர்கள்.
நாம் தமிழர் தனி ஒருவரால் உருவாக்கிய கட்சி அல்ல. காலத்தால் இன விடுதலைக்காக உருவான கட்சி. சீட்டுக்கும், சட்டசபைக்கும் செல்வது நமது லட்சியம் கிடையாது. நம்மிடையே இனம், மொழிப்பற்று இல்லை. இதற்கு காரணம் நம்மை சாதியை சொல்லி பிரித்து வைத்திருப்பதுதான்.
இந்த மாயையிலிருந்து தமிழகத்தையும், தமிழ் மக்களையும் விடுபட செய்வதே நமது கட்சியின் லட்சியம். எனவே ஒரே மொழி, ஒரே இனம் என தமிழன் ஒன்றுபட வழி வகுக்கும். எனவே சாதி பிரிவினைக்கு ஆட்படாமல் தமிழ் மொழியால் மட்டுமே நாம் ஒன்றுபட முடியும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
முன்னதாக மாவட்ட தலைவர் சிங்காரவேலு வரவேற்றார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில், துணைத் தலைவர் அன்சாரி, செயலாளர் வீரக்குமரன், இணை செயலாளர் முனியசாமி, பொருளாளர் பிரதீப்குமார், நகர தலைவர் முரளிதரன், செயலாளர் தமிழ்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.