ஜனார்த்தன ரெட்டி ஜாமீனுக்காக ரூ100 கோடி வரை லஞ்ச பேரம்-கைதான நீதிபதி வாக்குமூலம்
ஹைதராபாத்: சட்டவிரோத சுரங்க ஊழல் முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டி தரப்பு ஜாமீன் பெறுவதற்காக ரூ100 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக சிக்கிய நீதிபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத சுரங்க முறைகேடு ஊழல் வழக்கில் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆந்திர மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய ரூ10 கோடி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் சிபிஐ நீதிபதி பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டார்.
மேலும் இதே வழக்கில் நீதிபதி கே.லட்சுமி நரசிம்ம ராவ், நீதிபதி பிரபாகர் ராவ் ஆகியோரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கைதான நீதிபதிகளில் ஒருவரான லட்சுமி நரசிம்மராவ் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், ஜனார்த்தன ரெட்டி தரப்பு ஜாமீன் பெறுவதற்காக ரூ.100 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.ஜனார்த்தன ரெட்டியின் உறவினரான தசரதராமி ரெட்டி என்பவர் மூலமாக இந்த பேரம் பேசப்பட்டதாகவும் வாக்குமூலத்தில் அவர் கூறி இருக்கிறார்.